ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் ஆதங்கம்- தராசு ஷ்யாம் அவர்களின் ஆலோசனை

வார்டு உறுப்பினர்.

ஊராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்கள் பல்வேறு வகையான வாக்குறுதிகள் கொடுத்து வெற்றிபெற்று வந்துள்ளனர்.

ஊராட்சி தலைவரோடு நல்ல உறவு இருந்தால் மட்டுமே அவர்களின் வார்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.

நம்மிடம் பேசிய வார்டு உறுப்பினர் கூறியதாவது…

அய்யா…உள்ளாட்சி தேர்தலின் போது எங்கள் ஊராட்சி தலைவர் தேர்தலில் எனது நண்பரும்,வார்டு உறுப்பினராக நானும் போட்டியிட்டோம்.

எனது நண்பனின் வெற்றிக்காக நானும்,எனது வெற்றிக்கு எனது நண்பனும் உழைத்தோம்.

நான் வெற்றி பெற்றேன். எனது நண்பர் தோல்வி அடைந்து விட்டார். வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர் என்னை பழிவாங்குவதாக நினைத்து எனது வார்டுக்கு எதுவும் செய்வதில்லை என்று ஆதங்கத்தை கொட்டினார்.

இதற்கு என்ன தீர்வு என மூத்த பத்திரிகையாளரும்,வழக்கறிஞரும்,நமது இணைய தள ஆலோசகருமான தராசு ஷ்யாம் அவர்களிடம் கேட்டோம்.

வார்டு உறுப்பினருக்கென சிறப்பு அதிகாரம் கிடையாது. தனது வார்டு பிரச்சனை தீர ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிடலாம்.

அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்,மாவட்ட ஆட்சித் தலைவர் என மேல் முறையீடு செய்யலாம்.

அதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், வார்டு பொதுமக்களிடம் பிரமாண வாக்குமூலம் வாங்கி பொதுநல வழக்காக உயர்நீதிமன்றத்தை அணுகி வழிகாட்டல் தீர்ப்பை பெறலாம் என்றார்.

Also Read  கூடலூர் கோட்டத்தில் வன குற்றங்களை தடுக்க நடவடிக்கை

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பலரிடம் பேசியபோது..

அய்யா…எம்.பி, எம்.எல்.ஏ களுக்கு தொகுதி திதியாக வழங்குவதைப்போல,எங்களுக்கு ஊராட்சி வார்டு நிதியாக ஆண்டுதோறும் வழங்கவேண்டும்.

அதற்கான சட்டத்திருத்தத்தை அரசுகள் கொண்டு வரவேண்டும் என்றனர்.

ஓட்டுப்போட்ட மக்களுடனே வாழ்பவர்கள்.தினசரி மக்களின் கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உண்டு.இவர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது.

மாறாதது என்று ஒன்றுமே இல்லை.