மூக்கு அவ்வளவு முக்கியமா…

முக்கிய அங்கம்

ஐம்பொறி களில் ஒன்று நமது அழகிய மூக்கு…!

மூக்கு முழியுமா…! என்று மூக்கை வைத்தே அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்,

எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அவர் ஆணா- பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியும்.

மூக்கு நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் அடிப்படையானது.  சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால்,

அது நுட்பமாகவும், பாதுகாப்பாகவும், நேர்த்தியாகவும் இயற்கையாகவே உருவாகிறது.

  நடுச்சுவர் எலும்பு மூக்கை இரு பாகமாக பிரிக்கிறது. மேல் பாகத்தில் `நேசல் போன்’ என்ற எலும்பு உள்ளது.

உள்பக்க குழாய் போன்ற அமைப்பின் இரு பக்கமும் தசை இடம்பெற்றிருக்கிறது. இந்த தசை `ஏ.சி’ மெஷின்போல் செயல்படும்.

அதாவது சுவாசிக்கப்படும் காற்றின் தட்பவெப்ப நிலையை சீராக்கி, நுரையீரலுக்கு அனுப்பும்.

  இந்த தசை கோடை காலத்தில் சிறிதாகி, குளிர்காலத்தில் பெரிதாகும். ஜலதோஷம் ஏற்படும்போது தொற்றுக்கிருமிகளின் தாக்குதலால் தசை வீங்கி விடும்.

காற்று செல்லும் வழியை அடைத்து மூச்சுவிட சிரமமாகும். அதைத்தான் நாம் மூக்கடைப்பு என்கிறோம்.

மூக்கின் இருபுறத்தையும், கண்களின் மேல் பகுதியையும் கொண்ட கபால அமைப்பை சைனஸ் என்கிறோம்.

இது எலும்பால் ஆன `ஏர்பில் கேவிட்டி’ என்ற வெற்றிடமாகும். அதில், மூக்கை வழுவழுப்பாக்கும் திரவம் சுரக்கும்.

கிருமித் தொற்று எதுவும் இல்லாத நிலையில் அந்த திரவம் இயல்பாக இருக்கும்.

தும்மலோடு ஜலதோஷம் வந்தால், அந்த திரவத்தின் அடர்த்தி அதிகரிக்கும். வெளியே வராமல் சேர்ந்து, சைனஸ் பகுதியை அடைத்து தொந்தரவு தரும்.

இந்த தொந்தரவு சரியாகாமல் 3, 4 வாரம் என்று நீடித்து அவஸ்தை தந்தால், அந்த பாதிப்பிற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.

ஜலதோஷத்திற்கு முறையான மருத்துவ சிகிச்சை பெறாமல் கிருமித் தொற்று அதிகரித்து, அது நாள்பட `இன்பெக்டிவ் சைனசைட்டீஸ்’ ஆக மாறியிருக்கலாம்.

Also Read  தொட்டாச்சிணுங்கி ஒரு அருமருந்து

உணவாலோ, சுற்றுப்புற சூழலாலோ, வேறு காரணங்களாலோ அலர்ஜி தொடர்புடைய `ரைனோ சைனசைட்டீஸ்’ தோன்றும்.

அடிக்கடி தும்மல் ஏற்படுதல், தலை பாரம், மூக்கு ஒழுகுதல், காதில் அரிப்பு, கண்ணில் நீர் வழிதல் போன்றவை இதன் அறிகுறியாகும்.

இதற்கு சரியான சிகிச்சையை பெறாவிட்டால் மூக்கின் உள்ளே தசை வளர்ந்து, மூக்கை அடைக்கும்.

சிலருக்கு மூக்கின் பின்பகுதியில் வளரும் தசை, வாயின் பின்பகுதி வரை வளர்ந்து அதிக தொந்தரவு தரும்.

தற்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிகரித்து வருவது, குறட்டை! இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை பெறா விட்டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும்.

தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டான பெண்களில் ஏராள மானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது.

மூக்கின் பின்புறம் `அடினாய்ட்’ தசையும், தொண்டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது.

பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும்.

அந்த நெருக்கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாகும்…!

குறட்டைவிடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள்.

அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள்.

இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவைகளால் `ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படும்.

Also Read  வெற்றிலை- இதற்கு ஈடில்லை

இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும்.

அதனால் மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளும் பாதிக்கும்.

ஞாபக மறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும்.

குறட்டை விடுபவர்களுக்கு அதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக `ஸ்லீப் ஸ்டெடி’ செய்யவேண்டும்.

வீட்டிலே அவர்களை தூங்க வைத்து `பாலி சோம்னா கிராபி’ என்ற கருவி மூலம் பாதிப்பை அளவிடலாம்.

ஆஸ்பத்திரியில் தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து, `ஸ்லீப் எம்.ஆர்.ஐ.’ செய்து குறட்டையின் பாதிப்பை அறிந்து அதற்கு தகுந்தபடியும் நவீன சிகிச்சைகள் கொடுக்கலாம்.

சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியாத அளவிற்கு உடல் பருமன், வயது முதிர்வு,

குள்ளமான கழுத்து, மூக்கு- வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

அவர்கள் மூச்சு திணறல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக `சி.பி.ஏ.பி’ என்ற கருவி உள்ளது.

இதனை பொருத்திக்கொண்டு தூங்கினால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது.

குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல் பருமனை கட்டுக்குள்கொண்டு வர வேண்டும்.

பஞ்சுவைத்த தலையணையை சற்று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து அவர்கள் தூங்கவேண்டும்.

நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கிறோம். அதனால் மூக்கில் ஏற்படும் நோய்களையும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல் அவ்வப்போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்றுவிடவேண்டும்.

நோய் வரும் முன்பு காக்கும் விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் நமது ஆரோக்கியம் நம் கையில்….! இதை மறந்து விடக் கூடாது என்பது தான் நமது நோக்கம்…!