வெற்றிலை- இதற்கு ஈடில்லை

இவ்வளவு பயன்கள்

நமது கலாச்சாரத்தில்…..பிரிக்க இயலாத ஒரு முக்கியப் பொருளாக வெற்றிலையை நம் முன்னோர்கள் இணைத்துள்ளனர். அதற்கு மருத்துவரீதியான பல காரணங்களும் உண்டு.

எத்தனையோ தாவரங்களின் இலைகள் உலகில் இருப்பினும், அத்தனையையும் தன் முக்கியத்துவத்தால் பின்னுக்குத்தள்ளிவிட்டு தான் முன்னின்று வெற்றி பெறுவதால் இதற்கு வெற்றி + இலை என்று பெயர் சூட்டியுள்ளார்கள் என்று புரிந்துகொள்ளும் அளவு மகத்தான பலன்கள் கொண்டது வெற்றிலை.

நிறத்தாலும், மணத்தாலும், சுவையாலும் வெற்றிலை மூன்று வகையாகப் பிரித்து அறியப்படுகிறது.

குறைந்த மணமும் சற்று வெளிர் நிறமும், மிதமான காரச்சுவை உடையதையே பொதுவாக ‘வெற்றிலை’ என்று அழைக்கிறோம்.

இதுதவிர்த்து சற்று கருமை நிறமும் மிகுந்த காரமும் உடையதை ‘கம்மாறு வெற்றிலை’ என்றும், சிறிது கற்பூர மணமும் நடுத்தர காரமும் உடையதை ‘கற்பூர வெற்றிலை என்றும் அழைக்கிறோம்.

வெற்றிலை உடல் உறுப்புக்களை மட்டும் இன்றி உள்ளுறுப்புகளான பல்வேறு சுரப்பிகளையும் தூண்டி நன்கு செயல்பட வைக்கும் மூலிகை ஆகும்.

வயிற்றிலிருந்து துன்பம் செய்யும் வாயுவை சமன் செய்து வெளியேற்றுவதோடு செரிமானத்தை சீர்படுத்தக்கூடியதும் ஆகும்.

மேலும் உடலில் சுருங்கி விரியும் தன்மையுடைய உறுப்புக் களை ஒழுங்காக செயல்பட வைக்கும் குணமும், காயங்களையும் புண்களையும் சீழ்பிடிக்காமல் ஆற்றக்கூடிய திறனும் வெற்றிலைக்கு உண்டு.

வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைப்பதால் ஒருவிதமான நறுமணமுடைய எண்ணெய் கிடைக்கும்.

இந்த எண்ணெயை சேமித்து வைத்து உபயோகப்படுத்துவதால் விட்டுவிட்டு முறையாக வலிக்கிற கடும் வயிற்றுவலி குணமாகும்.

இந்த எண்ணெயை மேல் பூச்சாகப் பூசுவதால் புண்கள் சீழ் பிடிக்காமல் சீக்கிரத்தில் ஆறிவிடும். உள்ளுக்கு சில துளிகள் சாப்பிடுவதால் சுவாச நாளங்களைப் பற்றிய சளி, இருமல், ஆகிய நோய்கள் குணமாகும்.

வெற்றிலைக்கொடியில் வளரும் காய்கள் வயிற்றுக் கோளாறுகளைப் போக்கக்கூடியது.

  தாம்பூலம் தரிப்பது என்பது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றையும் சேர்த்து வாயிலிட்டு மெல்வது ஆகும்.

அதனின்று வரும் உமிழ்நீர் வாய் துர்நாற்றத்தை போக்குவதுடன் சீரணத்தையும் துரிதப்படுத்தும்.

   வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரை அந்தி சந்தி என இருவேளை பருகி வரும்போது நல்ல ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் பெறலாம்.

Also Read  இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள்

6 வெற்றிலையோடு சிறிது சுண்ணாம்பும் சிறிது பாக்கும் சேர்த்து மெல்வதால் கிடைக்கும் சத்து, 300 மி.லி. பாலில் இருந்து கிடைக்கும் சத்துக்கு இணையானதாகும்.

   தாம்பூலம் தரிப்பதால் ஈறுகளினின்று ரத்தம் கசிவது நின்றுவிடும். வெற்றிலையை வேக வைத்து நசுக்கி ஈறுகளின்மேல் தேய்ப்பதால் ஈறுகளின் ரத்தக்கசிவு நிற்பதுடன் பற்கள் கெட்டிப்படும்.

   வெற்றிலையை நசுக்கி வலியுள்ள முகப்பருக்கள் மீதும் மூட்டுக்கள் வீக்கமுற்று வலிக்கிறபோதும் மேல் பற்றாகப் போட விரையில் வீக்கமும் வலியும் குறைந்து நலம் உண்டாகும்.

   வெற்றிலையை நெருப்பில் காட்டி வதக்கி, அடுக்காக ஒன்றின்மேல் ஒன்றாக மார்பின் மேல் வைத்துக்கட்டுவதால் தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு குழந்தை சரியாகப் பால் குடிக்காதபோது பால் கட்டிக்கொண்டு மிக்க வேதனை தரக்கூடிய மார்பகக் கட்டியும் கரைந்து நலம் செய்யும்.

  தலை பாரம் கண்டு தலைவலி ஏற்படும்போது வெற்றிலைச்சாற்றை 3 துளிகள் மூக்கினில் விட்டு உறிஞ்சுவதால் தலை பாரம் குறையும்.

   உடலில் தீப்பட்டதால் காயங்கள் ஏற்பட்டபோது இளம் வெற்றிலையை தீக்காயங்களின் மேல் வைத்துக்கட்ட விரைவில் புண்கள் ஆறும்.

    சிறு குழந்தைகளுக்கு மலக்கட்டு ஏற்பட்டு வேதனையுறும்போதும், வயிற்றுப் பொருமல் வலி ஆகியன வந்தபோதும் வெற்றிலைக்காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து ஆசன வாயினுள் நுழைத்து வைக்க சிறிது நேரத்தில் மலம் வெளிப்பட்டு குழந்தை யின் வயிற்றுத் தொல்லைகள் போகும்.

   இரண்டு அல்லது மூன்று வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து தீநீர் வைத்துக் கொடுக்க செரியாமை நீங்கும்.

50 மி.லி. தேங்காய் எண்ணெயில் 6 வெற்றிலையைப் போட்டு கொதிக்கவிட்டு இலை நன்றாக சிவந்து பொரிந்ததும் எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு சொரி, சிரங்கு, படை ஆகியவற்றின்மேல் தடவி வர விரைவில் குணம் உண்டாகும்.

  வெற்றிலைச்சாறு ஒரு பங்கும் தண்ணீர் இரண்டு பங்கும் சேர்த்து அன்றாடம் பருகி வர சிறுநீர் நன்கு வெளியேறும்.

Also Read  ரசத்தில் இவ்வளவு அதிசயமா-கட்டாயம் படிங்க

   மூன்று வெற்றிலையைச் சாறு பிழிந்து அத்தோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் ஒருமுறை பருகிவர நரம்புகள் பலம் பெறும்.

  வெற்றிலையை கடுகு எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வெதுவெதுப்பான சூட்டில் மார்பில் பற்றாகக் கட்டி வர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்.

   ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது தணலில் காட்டி கசக்கிப்பிழிய வருகிற சாற்றினில் பத்து துளிகள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்க சளி, இருமல், குணமாகும். நெஞ்சுச்சளி கரைந்து மலத்தோடு வெளியேறும்.

    வெற்றிலை வலியைப் போக்கக்கூடியது என்பதாலும் வீக்கத்தைத் தணிக்கக்கூடியது என்பதாலும் வெற்றிலையை மைய அரைத்து கீல்வாதம்(ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ்) விரைவாதம் ஆகியவற்றுக்கு மேல் பற்றாக வைத்துக்கட்டலாம்.

     வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டிகளின் மேல் பற்றாகப் போட்டு வைக்க கட்டிகள் சீக்கிரத்தில் பழுத்து உடையும்.

   வெற்றிலைக் கொடியின் வேரைச் சுவைத்து விழுங்க பாடகர்களின் தொண்டை வெண்கலத்தைப்போல ஒலியைப் பெருக்கும்.

   வெற்றிலைச்சாற்றோடு சம பங்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க சுவாச அறை கோளாறுகள் அத்தனையும் குணமாகும்.

   திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்தோடு வெற்றிலை சாறும் தேனும் கலந்து உள்ளுக்குக் கொடுக்க ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய், நெஞ்சுச்சளி, இருமல் குணமாகும்.

     பாம்பு கடித்தவர்களுக்கு உடன் வெற்றிலைச்சாறு பருகக் கொடுப்பதால் விஷம் முறிந்து குணமாகும். இதனாலேயே இதற்கு நாகவல்லி என்றும் ஒரு பெயர் விளங்குகிறது.

    வெற்றிலைச்சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப்பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும்.

    இரவு படுக்கும்முன் 2 தேக்கரண்டி வெற்றிலைச்சாற்றுடன் சிறிது ஓமத்தைப் பொடித்துச் சேர்த்து குடித்துவர மூட்டுவலி, எலும்பு வலி ஆகியன குணமாகும்.