தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் -மாநில தலைவர் அரசுக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் சேலம் வாழப்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..அப்பொழுது அவர் கூறியதாவது..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் எனும் இனிப்பான செய்தியை அறிவித்திருப்பது மிக வரவேற்கத்தக்கது.. 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு அரசு பணியாளர்களின் ஓய்வு காலமும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இவ்வறிவிப்பு உறுதிசெய்கிறது..அதே தருணத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பில் ஊரக வளர்ச்சி துறை சார்ந்த உள்ளாட்சி பணியாளர்கள் தொடர்பான எந்த குறிப்பும் இல்லை என்பது பெருத்த ஏமாற்றத்தை தருகிறது.

தவிர 2018 ஆம் ஆண்டு முதல் காலமுறை ஊதியத்தில் இருந்து வருகின்ற 12,525 ஊராட்சி செயலர்கள் தமிழ்நாடு அரசின் பென்ஷன் திட்டத்தில் இணைத்திட வேண்டுமென்று 08 ஆண்டுகளுக்கு மேலாக மிகப் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தி பென்ஷன் கமிட்டியில் கோரிக்கைகளை வழங்கிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்றைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய அறிவிப்பில் ஊராட்சி செயலர்களை பென்ஷன் திட்டத்தில் இணைத்து அறிவிப்பு வெளியிடாமல் இருந்துள்ளது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

இன்னமும் சில ஆண்டுகளில் 4000 மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கருணை கூர்ந்து தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட அரசாணை வெளியிடப்படும் பொழுது அதில் ஊராட்சி செயலர்களையும் இணைத்து உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்..

Also Read  கொரோனா பணியின்போது பலியான விஏஓ குடும்பத்திற்கு நிவாரணமும்,வேலையும்- அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி

மேலும் ஏற்கனவே ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் பத்தாயிரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்