வழக்கே வா என வரவேற்போம் – ஒற்றர் ஓலை

என்ன ஒற்றரே தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறதே.

ஆமாம் தலைவா…நாம் வெளியிட்ட செய்திக்காக க்ரைம் பிராஞ்ச் பிரிவில் வழக்கு பதியப்படும் என ஒரு குழுவினர் ஓங்கி குரல் கொடுக்கிறார்களாம்.

பத்திரிகை நடத்தினால் அனைத்தையும் சந்தித்துதானே ஆக வேண்டும் ஒற்றரே…

சரியாக சொன்னீங்க தலைவா…நாம் வெளியிடும் செய்திகளுக்கு குரல் பதிவு உட்பட பல ஆதாரங்கள் உள்ளன. எவர்மீதும் நமக்கு வெறுப்பும் இல்லை,எவரை கண்டும் பயமும் இல்லை.தவறை செய்தியாக்கும் போது வழக்கு வந்தால் சந்தித்துதானே ஆகவேண்டும்.எவர் தவறு செய்தாலும் தொடர்ந்து செய்தி ஆக்கும் செயல் தொடரும்.

தப்பு செய்தவருக்கு துணையாக வரும் நியாவான்களை வாழ்த்தலாம் ஒற்றரே.அவர்களின் சேவை தொடரட்டும்.

தலைவா…ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி திறப்பதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத நிலை தொடர்கிறதாம்.

எங்கே ஒற்றரே…

தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கிறதாம் தலைவா. பத்துக்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் உள்ள ஊராட்சியில் கூட இரண்டே இரண்டு நபர்கள்தான் பணியில் உள்ளனர்களாம் தலைவா..

இந்த நிலையை மாற்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். விரைவில் கோடை காலம் வர உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் ஒற்றரே…

ஆமாம் தலைவா…உச்சி மீது வானிடிந்து விழுகின்ற போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என ஓங்கி குரல் எடுத்து பாடிவிட்டு மறைந்தார் ஒற்றர்.

Also Read  இஆப இடமாறுதலும் - ஊரக வளர்ச்சித் துறையினர் புலம்பலும் - ஒற்றர் ஓலை